திருமணம் நடைபெறும் காலத்தைப் பற்றிய கேள்விகளே, எமது மின்னஞ்சலுக்கு அதிகம் வருகின்றன. நாம் தொடர்ந்து உதாரண ஜாதகங்கள் மூலம் பாடம் சொல்லித் தந்தாலும், அதிக முனைப்போடு அதைப்படித்துத் தெளிவு பெற வாசகர்களுக்குச் சக்தி இல்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இருந்தாலும் கற்றதின் பயன் கற்பிப்பதே என்ற கோட்பாட்டுடன் வாழும் நாம் இன்னும் ஒரு உதாரண ஜாதகம் தருகின்றோம்.




இரண்டுக்குடைய சந்திரனும், ஐந்து பன்னிரண்டுக்குடைய சுக்கிரனும், 6 பாகை நெருக்கத்தில், பத்தாமிடத்தில் இருப்பது இளமையிலேயே திருமணம் முடிவதற்கான வலுவான காரணமாகும். ஆனால் எட்டுக்குடைய சனி, மற்றும் ஆறாமிடத்ததிபதி செவ்வாய் இவர்களின் விசேசமான பார்வை ஏழுக்குடைய வியாழனுக்குக் கிடைப்பதால் திருமணம் கொஞ்சம் தள்ளிப் போகும்.
இந்த ஜாதகரது 28வது வயதில் திருமணம் நடைபெற்றது. 28வது வயதில் முந்தா சிம்மராசியில் 18 பாகை 07 கலையில் இருக்கும். எனவே கும்பத்தின் 18 பாகை 07 கலை திருமணத்தைக் குறிக்கும். இதன் நவாம்சம் மீனத்தில் அமைகிறது. ஜன்ம ஜாதகத்தில் மீனத்தில் இரண்டுக்குடைய சந்திரனும், மீனத்துக்குக் கேந்திரத்தில் தனுசில் ஏழுக்குடைய வியாழனும் மாங்கல்ய ஸ்தானாதிபதி சனியும் இருப்பதால், 28வது வயது திருமணத்தைக் கொண்டு வரும் என்ற முடிவுக்கு வரலாம். முந்தாவின் ஏழாவது ராசியின் அம்சம் தனுசில் அமையும் போது (அதாவது முந்தா சிம்மராசியின் 6 பாகை 40 கலை முதல் 10 பாகை முடிய நகரும் போது) இதேபோல் சந்திரனும், குருவும், சனியும் கேந்திரத்தில் இருக்குமே அப்போது ஏன் திருமணம் நடைபெறவில்லை எனக் கேள்வி எழலாம். உண்மையான சோதிட ஞானத்தைத் தேடுபவர்களுக்கு இந்தச் சந்தேகம் வரும் வரவேண்டும். இப்படிக் கேள்விகளைத் தொடர்ந்து எமது தந்தையாரிடம் கேட்டு வந்ததால்தான் ஓரளவுக்குப் புதிய விசயங்களை நாம் கற்றுக் கொண்டோம். அந்தக் கால கட்டம் இந்த ஜாதகரின் 22 வயது, 5 மாதம் முதல் 23 வயது, 9 மாதம் முடிய உள்ள காலமாகும். ஆனால் நாம் ஏற்கெனவே சனி, செவ்வாய் பார்வை திருமணத்தைத் தடை செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளோம். மேலும் இந்தப் பதினாறு மாத இடைவெளியில் ஏழுக்குடைய வியாழனும், முந்தாவுக்கு ஏழுக்குடைய சனியும் 6 மாதங்கள் வக்ரமாக இருந்துள்ளன. ஆனால் 28 வயது பிறக்கும் போது முந்தாவுக்கு ஏழுக்குடைய சனி ஜன்ம லக்னமான மிதுனத்திலும், லக்னத்துக்கு ஏழுக்குடைய வியாழன், ஜன்ம லக்னத்துக்கு மூன்றிலும் உள்ளன. எனவே நாம் இந்த 28 வயதை எடுத்துக்கொண்டோம். இனி 28வது பிறந்தநாள் ஜாதகத்தைப் பார்ப்போம்.




ஜன்ம லக்னத்துக்கு ஏழுக்குடைய வியாழனும், வருச லக்னத்துக்கு ஏழுக்குடைய செவ்வாயும் ஒருவருக்கொருவர் திரிகோண பார்வையில் உள்ளனர். ஏழுக்குடைய செவ்வாயின் நவாம்சபதி புதன் பத்தாம் பாவத்தில் உள்ளது. இதே செவ்வாயின் ஜன்ம நவாம்சபதி சுக்கிரன், வருச லக்னத்துக்குப் பதினொன்றில் சந்திரனோடு சேர்ந்துள்ளது. 3, 7, 11க்குடையவர்களுக்குத் திருமணத்தைக் கொண்டு வரும் வலிமை அதிகம். இங்கே சந்திரன் 3க்குடையவனாக வந்து பதினோராமிடத்தில் லக்னாதிபதியோடு சேர்க்கை. ஏழுக்குடைய செவ்வாய்க்குப் பதினோராமிடத்து அதிபதி குருவின் ஒன்பதாம் பார்வை. ஜன்ம லக்னத்துக்கு ஏழாமிடமான தனுசுக்கு முந்தாவின் ஏழாம் பாவாதிபதி சனியின் பார்வை மற்றும் ஏழாமிடத்ததிபதி குருவின் ஐந்தாம் பார்வை. எல்லாவற்றுக்கும் மேலாக ஜன்ம லக்னத்துக்கு ஏழாம் பாவாதிபதி குருவும், முந்தாவின் ஏழாமிடத்ததிபதி சனியும் ஒருவருக்கொருவர் உபசயஸ்தானத்தில். இக்காரணங்களால் இந்த 28வது வயது திருமணத்தைக் கொண்டு வந்தது.

இவரது திருமணம் 28.11.2004ல் செவ்வாய் தசையில் நடைபெற்றது. சந்திரன் திருமணத்தோடு நெருங்கிய சம்பந்தம் பெற்றிருந்தும் 9.9.2004ல் தொடங்கிய சந்திர தசையில் நடைபெறவில்லை. அன்று சந்திரன் மிதுனத்தில் 22 பாகையில் உள்ளது. இது வருச லக்னத்தில் ஏழாம் பாவத்துக்கு எட்டாம் பாவமாக அமைந்தது. சந்திர தசையில் திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன என்றாலும், செவ்வாய் தசையில் தான் திருமணம் கைகூடியது. ஆனால் திருமண நாளில் சந்திரன் ரிசபத்தில் வருச லக்னத்தில் இருந்தது. எனவே ஜன்ம ஜாதகம், வருச ஜாதகம் இவற்றைச் சேர்த்து வைத்து ஆய்வு செய்தால் மணநாளைக் கூறமுடியும் என்பதே எமது முடிவு. வருச லக்னத்துக்குப் பத்தாம் பாவத்தோடு நெருங்கியுள்ள சூர்ய தசையில் இவர் கல்லூரி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார் என்பது சோதிட ஆர்வலர்களுக்கு நாம் தரும் விசேச குறிப்பு.
This Week’s Quote:
Tis but a part we see, and not a whole.
- Alexander Pope
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.