சமீபத்தில் நமக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது. அட்சய திருதியை நாளில் திருமணம். கார்த்திகை நட்சத்திரத்தில், மிதுன லக்னத்தில் முகூர்த்த வேளை குறிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை நட்சத்திரம் எந்தச் சுபகாரியங்களுக்கும் எடுக்கப்படுவதில்லை. சமீப காலங்களில் அட்சய திருதியைக்கு வந்திருக்கும் கொண்டாட்டங்களைப் பார்த்துவிட்டு, அந்தச் சோதிடர் கார்த்திகை நட்சத்திரத்தைக் கவனிக்காமல் இருந்திருப்பாரோ என்னவோ? ஆனால் ஏழாமிடத்தில் சனி, செவ்வாய் இருக்கும் மிதுன லக்னத்தை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. கடலங்குடி நடேச சாஸ்திரிகள் பிருஹஜ் ஜாதகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில், ஸ்திரீ ஜாதகாத்யாயத்தின் இறுதியில், “விந்திய வாசிகளால் சொல்லப்பட்ட விவாக படலத்தை இங்கு எழுதுவது அவசியம்” என்று குறிப்பிட்டு சில விசயங்களைத் தந்துள்ளார். அதை வாசகர்களின் பார்வைக்குத் தருகின்றோம்.
விவாஹ முகூர்த்த லக்னத்தில் சூரியனோ, செவ்வாயோ இருந்தால் அந்தப் பெண் விதவையாவாள். ராகு இருந்தால் அவளது குழந்தைகள் இறந்து போகும். சனி இருந்தால் அவள் செல்வங்களை இழந்துவிடுவாள். புதன், குரு சுக்கிரன் இருந்தால் நல்ல வாழ்க்கை வாழும் பாக்கியம் உண்டு. விவாஹ லக்னத்தில் சந்திரன் இருந்தால் அவள் சீக்கிரமே மரணமடைவாள்.
விவாஹ லக்ன பலன்கள் பெண்ணுக்கு மட்டுமே சொல்லப்படுகின்றன. எனவே பெண்களின் பெற்றோர்கள்தாம் விவாஹ லக்னத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவாஹ நாளில் உள்ள கிரகநிலைகள் மட்டுமின்றி, பெண்ணின் ஜாதகத்தில் உள்ள கிரகநிலைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஜன்ம ஜாதகத்தில் உள்ள கிரகநிலைகள், விவாஹ லக்னத்தைப் பாதிக்காத முறையில் விவாஹ லக்னத்தை நிச்சயம் செய்ய வேண்டும். பொதுவாக விவாஹ லக்னத்துக்குக் கேந்திரங்களில் பாபக்கிரகங்கள் இருப்பதை விவாஹ படலம் அங்கீகரிக்கவில்லை. சுபக்கிரகங்கள் மட்டுமே கேந்திரங்களில் இருக்கலாம்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழு மற்றும் எட்டாமிடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே விவாஹத்தின்போதும் ஏழு மற்றும் எட்டாமிடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். விவாஹ லக்னத்துக்கு ஏழில் சனி இருந்தால், அந்தப் பெண் விதவையாகின்றாள். செவ்வாய் இருந்தால் சிறைவாசத்தை அனுபவிக்கின்றாள். வியாழனிருந்தால் மரணமும், புதன், சூரியன் இருந்தால் வியாதியும், ராகு இருந்தால் செல்வக்குறைவும், சந்திரனிருந்தால் வேறு நாடுகளுக்குச் செல்லுதலும், சுக்கிரனிருந்தால் மரணமும் உண்டாகின்றன. கூர்ந்து கவனித்தால் திருமண லக்னத்துக்கு ஏழில் எந்தக் கிரகமும் இருக்கக்கூடாது என்பது தெரிய வரும்.
இதேபோல் எட்டாமிடத்தில் உள்ள புதன், குரு இவர்கள் கணவனிடமிருந்து பிரிந்து வாழும் நிலையை உண்டாக்குகின்றார்கள். எட்டில் சந்திரன், சுக்கிரன்,ராகு இருந்தால் அந்தப் பெண் சீக்கிரமே இறந்து போகின்றாள். செவ்வாய் இருந்தால் அவள் நோயாளி ஆகின்றாள். எட்டாமிடச் சனி மட்டும் நல்ல பலனைக் கொடுக்கிறது. எட்டாமிடத்தில் சனி இருப்பது போல் விவாஹ லக்னம் அமைந்தால் மணப்பெண் செல்வச் செழிப்போடும், கணவனுக்குப் பிடித்தமானவளாகவும் வாழ்கின்றாள்.
எமது அனுபவத்தில் ஜன்ம ஜாதகத்தில் மோசமான அம்சங்கள் இருந்தால், அந்தப் பெண்ணின் திருமண லக்னமும் மேற்கூறிய குறைகளோடுதான் அமைகின்றது. எனவே ஜன்ம ஜாதகத்தை நன்கு பரிசீலனை செய்து, விவாஹ முகூர்த்த லக்னத்தின்போது உள்ள கிரகங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டே திருமண நாளைக் குறிக்க வேண்டும். இல்லையெனில் அப்பெண்ணின் இல்லற வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவுவதற்குப் பதிலாகப் பிரச்னைகளும், கவலையுமே உண்டாகும்.
This Week’s Quote:
Every man is born as many men and dies as a single one.
- Martin Heidegger
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.