வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தின் பன்னிரண்டாவது அத்தியாயம் நாபஸ யோகங்களை விளக்கமாகச் சொல்கின்றது. மூன்று ஆஸ்ரய யோகங்கள் இரண்டு தளயோகங்கள், இருபது ஆகிருதி யோகங்கள், ஏழு சங்க்யா யோகங்கள் ஆக மொத்தம் முப்பத்திரண்டு நாபஸ யோகங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆஸ்ரய யோகங்கள் 3
ரஜ்ஜூ, முஸலம், நளம் என்று ஆஸ்ரய யோகம் 3 வகைப்படும். அனைத்துக் கிரகங்களும் சரராசிகளில் இருக்கும் போது ரஜ்ஜூ யோகம் உண்டாகின்றது. அனைத்துக் கிரகங்களும் ஸ்திரராசிகளில் இருக்கும் போது முஸலம் என்னும் யோகமும், அனைத்துக் கிரகங்களும் உபய ராசிகளில் இருக்கும் போது நளம் என்னும் யோகமும் உண்டாகின்றன. அனைத்துக் கிரகங்களில் ராகு மற்றும் கேது சேர்க்கப்படவில்லை.

இந்த ஜாதகத்தில் எல்லாக் கிரகங்களும் கடகம், துலாம், மகரம் என்னும் சரராசிகளில் இருக்கின்றன. எனவே இந்த ஜாதகர் ரஜ்ஜூ என்னும் யோகத்தில் பிறந்தவராகக் கருதப்பட வேண்டும். ரஜ்ஜூ யோகத்தில் பிறந்தவன் வழிப் பிரயாணம் செய்வதில் பற்றுள்ளவனாகவும், பெரும்பாலும் வேறு தேசத்திலேயே வசிப்பவனாகவும், பிறருடைய செல்வம் செல்வாக்கு இவைகளைக் கண்டு பொறாமை கொள்பவனாகவும் இருப்பான்.

இந்த ஜாதகத்தில் எல்லாக் கிரகங்களும் ஸ்திர ராசிகளான ரிசபம், சிம்மம், கும்பம் ஆகிய இராசிகளில் இருப்பதால் இந்த ஜாதகர் முஸலம் என்னும் யோகத்தில் பிறந்தவராகக் கருதப்பட வேண்டும். முஸல யோகத்தில் பிறந்தவன் செல்வந்தனாகவும், கர்வம் உள்ளவனாகவும், தற்புகழ்ச்சி செய்துகொள்பவனாகவும், பல்வேறு தொழில்களை ஆரம்பித்துச் செய்ய வல்லவனாகவும் இருப்பான்.

இந்த ஜாதகத்தில் எல்லாக் கிரகங்களும் உபயராசிகளான மிதுனம், கன்னி, தனுசு ஆகிய இராசிகளில் இருப்பதால் இந்த ஜாதகர் நளம் என்னும் யோகத்தில் பிறந்தவராகக் கருதப்பட வேண்டும். நளயோகத்தில் பிறந்தவன் அங்கக் குறைவு உள்ளவனாகவும், ஸ்திரமான புத்தியுள்ளவனாகவும், செல்வந்தனாகவும், எல்லாக் காரியங்களையும் மிகவும் நுட்பமான புத்திக்கூர்மையோடு செய்ய வல்லவனாகவும் இருப்பான்.
மேலேயுள்ள ஜாதகங்கள் உதாரணத்துக்காகத் தரப்பட்டுள்ளன. மேலேயுள்ள தேதிகளில் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் மேலேயுள்ள யோகங்கள் சம்பவிக்கும். சரராசிகளில் கிரகங்களிருக்கும் போது சர லக்னத்தில் தான் பிறக்க வேண்டும் என்றோ, ஸ்திர ராசிகளில் கிரகங்கள் இருக்கும் போது ஸ்திர லக்னத்தில்தான் பிறக்க வேண்டும் என்றோ கூறப்படவில்லை.
தளயோகங்கள் 2
கேந்திரங்கள் என்னும் 1, 4, 7, 10 இவைகளில் சுபக்கிரகங்கள் மட்டும் இருந்து பாபக்கிரகங்கள் இல்லாமல் இருந்தால் இது மாலா என்னும் யோகமாகும்.
கேந்திரங்கள் என்னும் 1, 4, 7, 10 இவைகளில் பாபக் கிரகங்கள் மட்டும் இருந்து சுபக்கிரகங்கள் வேறு இடங்களில் இருந்தால் இது சர்ப்பம் என்னும் யோகமாகும்.
மாலா யோகத்தில் பிறந்தவன் சுகங்களை அனுபவிக்கின்றவனாகவும், சர்ப்பயோகத்தில் பிறந்தவன் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பவனாகவும் இருப்பான்.

எல்லாச் சுபக்கிரகங்களும் கேந்திரங்களில் இருந்தால் மாலா எனப்படும் யோகம் சித்திக்கின்றது. மேலேயுள்ள ஜாதகம்ஒரு உண்மையான ஜாதகம். வங்கியில் பணியாற்றும் இவர் யோகத்துக்குப் பொருத்தமாகவே வாழ்கின்றார்.

எல்லாப் பாபக்கிரகங்களும் கேந்திரங்களில் இருந்து சுபர்கள் கேந்திரங்களில் இல்லாமல் இருந்தால் கிடைக்கும் ஸர்ப்பயோகத்துக்கு இந்த ஜாதகம் உதாரண ஜாதகம். மீதமுள்ள ஆகிருதி யோகங்கள் மற்றும் சங்க்யா யோகங்களைப் பற்றி அடுத்த வாரம் விவரிப்போம்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.