பெண்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்ற நோய் மார்பகப் புற்று நோயாகும். இந்த வாரம் மார்பகப் புற்று நோயால் பீடிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்தும் பயனின்றி இறந்து போன ஒரு பெண்மணியின் ஜாதகத்தைப் பார்ப்போம்.




(கிரகஸ்புடங்கள், பாவஸ்புடங்கள் இவைகளை நாம் தருவதன் நோக்கம் இதுவரை இம்மாதிரி ஸ்புடக் கணக்குகளை அறியாதவர்களுக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களுக்குச் சோதிடத்தின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தத்தான். பன்னிரண்டு பாவங்களில் ஆறை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், மற்ற பாவங்களுக்கு இந்த ஸ்புடங்களுடன் ஆறு ராசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்கே. இரண்டாம் பாவத்துடன் ஆறு ராசிகளைச் சேர்த்தால், எட்டாம் பாவம் கிடைக்கும். இவ்வாறே எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொள்க.)
லக்னம் முதல் பன்னிரண்டாம் பாவம் முடிய, ஒவ்வொரு பாவமும் நம் உடலின் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கின்றது. இதில் மார்பைக் குறிப்பது நான்காம் பாவம். எனவே இந்த ஜாதகத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களைப் பார்க்கலாம். நோய் அல்லது ரோகம் என்பதை ஆறாம் பாவத்தின் மூலம் அறிய வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்த ஜாதகத்தில் நான்குக்கும் ஆறுக்கும் உள்ள சம்பந்தங்களைப் பார்ப்போம்.
- நான்காம் பாவாதிபதி செவ்வாய் ஆறாம் பாவத்தில் இருக்கிறது.
- ஆறாம் பாவாதிபதி சனி, பத்தாம் பார்வையாக நான்காம் பாவாதிபதி செவ்வாயைப் பார்க்கின்றது.
- பன்னிரண்டாம் பாவாதிபதி சந்திரன், நான்காம் பாவத்தில் உள்ளது. (பன்னிரண்டாம் இடம் நோயுற்றுத் தொடர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் இருப்பதைக் குறிக்கின்றது)
- நான்காம் பாவத்தைக் (குறிப்பாக மார்பகங்களைக்) குறிக்கும் காரகன் சந்திரன் கடக நவாம்சத்தில் இருக்கிறது. மேலும் மீன ராசியில் உள்ள அட்டமாதிபதி குருவின் பார்வையையும் பெறுகின்றது. ஜலராசிகள் நோயைப் பெருக்கும் செல்களைக் குறிக்கின்றன. மரணத்தைக் குறிக்கின்ற வியாழனுக்கு நான்காம் பாவத்துடன் நெருங்கிய சம்பந்தம் ஏற்படுகிறது.
- நோயைக் குறிக்கும் புள்ளி ரிசப ராசியில் 9 பாகை 35 கலையில் உள்ளது. (லக்னம் - சந்திரன் + லக்னம்). இப்புள்ளியின் அதிபதி சுக்கிரன், மீனத்தில் உள்ள வியாழனால் ஏழாம் பார்வையால் பார்க்கப்படுகின்றது. மேலும் இப்புள்ளியின் நவாம்சம் மீனத்தில் விழுகின்றது. எனவே வியாழனுக்குரிய புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இவருக்கு 1985 ஆகஸ்ட் மாதம் மார்பக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மார்பகம் நீக்கப்பட்டது. அப்போது செவ்வாய் பன்னிரண்டாம் இடமான கடகத்தில் இருந்தது. இவர் 1985 டிசம்பர் மாதம் வியாழன் மகரத்திலும், செவ்வாய் துலாத்திலும், ஏனைய கிரகங்களான சூர்யன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகியவை விருச்சிகத்திலும் இருக்கும் போது காலமானார்.
எனவே நான்காமிடத்துக்கு ஆறாமிடத்ததிபதி சம்பந்தமும், ஆறாமிடத்ததிபதிக்குச் செவ்வாய் சம்பந்தமும், நோய் வரக்கூடிய பாகங்களுக்கு வியாழனின் பார்வையும் இருக்குமானால் இந்த மாதிரிக் கிரக அமைப்புள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு. இவர்கள் முன் எச்சரிக்கையாகச் சோதனைகள் மேற்கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளல் வேண்டும்.
சோதிடத்தில் நிபுணராக வரத்துடிக்கும் இளைஞர்களுக்கு இக்கட்டுரை ஒரு அடிப்படைச் சந்தேகத்தை எழுப்ப வேண்டும். யாராவது அந்தச் சந்தேகத்தை எழுப்புகின்றார்களா என்பதைப் பார்க்க நாமும் காத்திருக்கின்றோம்.
This Week’s Quote:
In science the important thing is to modify and change one's ideas as science advances.
- Herbert Spencer
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
