பிருஹஜ் ஜாதகத்தின் ஆறாவது அத்தியாயம் குழந்தைப் பருவத்திலேயே ஒரு சிசு மரணமடையும் யோகங்களைப் பற்றிச் சொல்லுகிறது.இரவும், பகலும் சந்திக்கின்ற விடியற்காலை அல்லது சாயங்காலப் பொழுதில், (சந்தியாவேளை எனக் கடலங்குடி குறிப்பிடுகின்றார்) சந்திரஹோரையில் ஒரு குழந்தை பிறக்குமானால் அக்குழந்தை விரைவிலேயே மரணமடைகின்றது. கூடுதலாக ஒரு விச யம் வலியுறுத்தப்படுகின்றது. பாபக்கிரகங்கள் இராசிகளின் கடைசி பாகத்தில் இருக்க வேண்டும். பாபக் கிரகங்களான சூர்யன்,செவ்வாய், சனி என்ற மூன்று கிரகங்களும் ராசிகளின் கடைசி பாகத்தில் இருக்க வேண்டுமா அல்லது ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமா என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. பிருஹஜ் ஜாதகத்தின் பல்வேறு இடங்களில் அந்திய நவாம்சம் என்ற அர்த்தத்தைத் தரும் கடைசி அம்சம் என்ற சொல் அடிக்கடி வருகின்றது. இதை ராசியின் கடைசி பாகம் என்றே உரையாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். ஆனால் எமது தந்தையார் கடைசி நவாம்சம் என்பதை நவாம்சத்தில் 12-வது ராசி என்று குறிப்பிடுவது வழக்கம். இப்போது இச்சுலோகத்தின்படி பிறந்த உடனேயே இறந்து போன ஒரு குழந்தையின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.




இக்குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் இறந்துவிட்டது. காரணங்களை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்திச் சொல்லலாம்.
- குழந்தை பிறந்தநாளில் சூர்யாஸ்தமனம் மாலை 6.34 மணி. எனவே இது சந்தியாகாலம்.
- தனுசு லக்னத்தில் சந்திரஹோரையில் குழந்தை பிறந்துள்ளது. ஏழில் சூர்யன், பத்தாமிடத்தில் செவ்வாய், சனி என மூன்று பாபக்கிரகங்களும் கேந்திரங்களில் உள்ளன.
- சனி ஸ்புடமும், பத்தாம் பாவஸ்புடமும் ஒன்றே. மேலைநாட்டினர் இதை மிகவும் துக்கத்தைக் கொண்டு வரும் சேர்க்கையாகக் கருதுகின்றனர்.
- பத்தாம் பாவத்தில் செவ்வாய், சனி சேர்க்கை.
- செவ்வாய் எட்டாம்பாவத்தின் நவாம்சபதியாகவும், மரணத்தைக் கொண்டு வரும் 22வது திரேக்காணாதிபதியாகவும் இருப்பதும், நான்காம் பார்வையாக லக்னத்தைப் பார்ப்பதும் மரணத்தைத் துரிதப்படுத்தும் காரணிகளாக ஆகின்றன.
- நவாம்சத்தில் சனி லக்னத்துக்குப் பன்னிரண்டாமிடத்தில் இருக்கின்றது.
- மிருத்யு சகம் என்றழைக்கப்படும் புள்ளி விருச்சிகத்தில் 25 பாகை 38 கலையில் உள்ளது. எனவே செவ்வாய்க்கு மாரகம் செய்யும் சக்தி கூடுகிறது. இப்புள்ளியின் நவாம்சம் கும்பத்தைச் சேர்கின்றது. எனவே செவ்வாய், சனி இரண்டுமே மாரகம் செய்யும் சக்தியைப் பெறுகின்றன.
- மிருத்யு சகத்தின் நவாம்சம் கும்பத்திலிருப்பதால் நவாம்ச லக்னத்துக்கு ஏழில் அமைகிறது. இதுவும் மரணத்தை விரைந்து கொண்டு வரும் காரணங்களில் ஒன்று.
பன்னிரண்டு வயது வரை மரணத்தை ஜாதகத்தால் கணக்கிட முடியாது எனக் குறிப்பிடும் சில நூலாசிரியர்கள், முதல் நான்கு வருடங்கள் தாயின் வினைப்பயனாலும், இரண்டாவது நான்கு வருடங்கள் தந்தையின் வினைப்பயனாலும், மூன்றாவது நான்கு வருடங்கள் ஜாதகனின் வினைப் பயனாலும் தோசத்தைக் கொண்டுவர வல்லமை பெற்றவை எனவும் கூறுகின்றார்கள். ஆனால் வராகமிகிரர் ஓராண்டுக்குள்ளேயும் மரணம் சம்பவிக்கக் கூடிய யோகங்களைச் சொல்லியிருப்பதால் அவருக்கு இக்கருத்துக்களில் உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. நமது கருத்தும் இதுவே.
எட்டாம் பாவத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்கள் லக்னத்துக்குக் கேந்திரங்களில் இருக்கும்போது,லக்னத்துக்கு இன்னொரு பாபக்கிரகத்தின் பார்வை இருக்குமானால், விரைவில் மரணத்தைச் சொல்லலாம் என்பது முன்னோர் அபிப்ராயம்.
This Week’s Quote:
Without music,life would be a mistake.
- Nietzsche
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
