நாம் எழுதிய கட்டுரைகளில் ராஜயோகம் யாருக்கு என்ற கட்டுரை மிக அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்டு வருகிறது. தமது ஜாதகத்தில் நல்ல யோகங்கள் உள்ளனவா என்று அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆசைப்படுவது இயற்கையே. ஆனால் சோதிட நூல்களில் எளிய வழிகளில் யோகங்களை அறிந்து கொள்ளுமாறு எதுவும் சொல்லப்படவில்லை. இந்த இந்த ராசிகளில் இன்ன இன்ன வகையில் கிரகங்கள் அமைந்திருந்தால் ராஜயோகம் கிட்டுமென்று சொல்லப்பட்டிருப்பதால் பெரும்பான்மை மக்களுக்கு இந்த யோகங்கள் கிடைக்கப்பெறாது. சனி குறிப்பிட்ட ராசியில் இருக்க வேண்டும். வியாழன் குறிப்பிட்ட ராசியில் இருக்க வேண்டும் என்ற விதிகள் விதிக்கப்பட்டிருப்பதால் அவ்வாறு அமையப்பெறாத ஜாதகர்கள் தம்மை நொந்து கொள்வதும் உண்டு. எனவே எல்லோரும் எளிய முறையில் ராஜயோகம் பற்றி அறிந்து கொள்ள இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.
1.) எந்த லக்னத்தில் பிறந்தாலும் சனி, செவ்வாய் இருவரும் லக்னத்தில் இருக்கும் போது 4ல் சந்திரனும், 7ல் வியாழனும், 9ல் சுக்கிரனும், 10ல் சூரியனும், 11ல் புதனும் இருக்கப் பிறந்தவர்கள் ராஜயோகத்தை அனுபவிப்பர். லக்னத்தில் செவ்வாயும், சனியும் இருக்க வேண்டுமென்பது மட்டுமே கட்டாயம். மற்ற கிரகங்கள் யாவும் ஏதாவது ஒரு விதத்தில் 4, 7, 9, 10, 11ல் இருந்தால் போதும். நான்கில் சந்திரனும், பத்தில் சூரியனும், ஏழில் வியாழனும் என்று முதலில் கூறியிருப்பது சந்திரனும், சூரியனும் திக்பலம் பெறுவார்கள் என்பதற்காகச் சொல்லப்பட்டிருக்கலாம். வியாழன் ஏழில் இருந்தால் லக்னத்துக்கு வலிமை கிடைக்கும் என்பதாலும் சொல்லப்பட்டிருக்கலாம். உதாரண ஜாதகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


2.) கடகத்தில் வியாழனும் மேஷத்தில் செவ்வாயும் இருக்கும் போது கடகமோ அல்லது மேஷமோ லக்னமாக இருந்தால் ராஜயோகம் கிடைக்கிறது. மற்ற ஐந்து கிரகங்களும் எப்படியும் எந்த ராசியிலும் இருக்கலாம்.உதாரண ஜாதகங்கள் இம்மாதிரி அமையும்.


3.) லக்னத்தில் சனியும், நான்கில் வியாழனும், பத்தாமிடத்தில் சூர்யனும், சந்திரனும் இருக்கும் போது மற்ற மூன்று கிரகங்களும் பதினோராமிடத்தில் இருக்க ராஜயோகம் கிடைக்கும். பன்னிரண்டு ராசிகளில் எந்த ராசியும் லக்னமாக இருக்கலாம். உதாரணத்திற்காக நான்கு விதமான ஜாதகங்கள் தரப்படுகின்றன.




4.) சனி மகர ராசியில் இருக்கும் போது அந்த மகரமே லக்னமாகவும் ஆகி மீதி ஆறு கிரகங்களும் மூன்று, ஆறு, ஒன்பது பன்னிரண்டாமிடங்களில் இருந்தால் ராஜயோகம் கிடைக்கும். இதில் மகரத்தில் சனி இருக்க வேண்டும், மகரமே லக்னமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் கட்டாயம். மற்ற கிரகங்கள் எப்படியிருந்தாலும் அவை 3, 6, 9, 12 என்ற இடங்களில் இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. கீழே உதாரண ஜாதகங்கள் தரப்படுகின்றன.




5.) சந்திரனும், வியாழனும் தனுசு இராசியில் இருக்கும் போது செவ்வாயும் மகர ராசியில் இடம் பெற்றுச் சுக்கிரன் அல்லது புதன் உச்சமாகி லக்னத்தில் இருந்தால் ராஜயோகம் கிடைக்கின்றது.


இங்கே சனி, சூரியன் பற்றிக் குறிப்புக்கள் ஏதுமில்லை. அவை எந்த ராசியிலும் இருக்கலாம். இப்போது கன்னியில் இருக்கும் வியாழன் சுமார் இரண்டு வருஷங்களில் தனுசைச் சேரும் போது இந்த யோகத்தில் பிறக்கும் வாய்ப்பு பலருக்குக் கிடைக்கலாம்.
நாம் முன்னமேயே குறிப்பிட்டிருப்பது போல லக்னம் நான்கு, ஏழு அல்லது பத்தாமிடத்தில் ஒரு கிரகம் பலமாக இருந்தால் போதும் அந்த ஜாதகர் பெருஞ் செல்வந்தராகவோ, சமுதாயத்தில் மதிப்புமிக்க இடத்தை அடைபவராகவோ இருப்பார்.
மேஷம், சிம்மம் அல்லது தனுசு இராசிகளில் பெரும்பாலான கிரகங்கள் இருக்கும் போது பிறந்தவர்கள் அரசியலிலும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசிகளில் பெரும்பாலான கிரகங்கள் இருக்கும் போது பிறந்தவர்கள் தத்துவம், விஞ்ஞானம் ஆகிய துறைகளிலும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இராசிகளில் பெரும்பாலான கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்கள் நுண்கலைகளிலும், ரிசபம், கன்னி, மகரம் ஆகிய இராசிகளில் பெரும்பாலான கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்கள் வியாபாரம், விவசாயம் ஆகிய துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.
This Week’s Quote:
In individuals, insanity is rare; but in groups, parties, nations and epochs, it is the rule.
- Nietzche.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
