ஒரு கிரகத்தின் தசா வருடங்களைப் பன்னிரண்டு பங்கு வைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பங்கையும் தசாநாதன் இருக்கும் ராசி தொடங்கிப் பன்னிரண்டாம் ராசி வரையும் சம்பந்தப் படுத்திப் பலன் சொல்ல வேண்டும் என்றும், மந்த்ரேஸ்வரர் தனது பலதீபிகை என்னும் சோதிட நூலில் குறிப்பிடுகின்றார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் சில சோதனைகள் செய்து பார்த்ததில் கூடுதலாகச் சில விசயங்கள் தெரிய வருவதால் நாம் இக்கட்டுரையைச் சோதிட ஆர்வலர்களுக்குத் தருகின்றோம்.
தசா வருடங்களாக நாம் எடுத்துக் கொள்வது, உடுதசை என்று சொல்லப்பெறும் விம்சோத்தரி தசை அல்ல. வராகமிகிரரின் நைசர்க்கிக தசா வருடங்களையே நாம் எடுத்துக் கொள்கின்றோம். அதேபோலத் தசாநாதனின் ராசி என்பதை, நாம் தசாநாதனின் துவாதசாம்ச ராசி என்று எடுத்துக் கொள்கின்றோம். வாசகர்கள் தற்போது எல்லாச் சோதிடர்களும் பின்பற்றுகின்ற நட்சத்திர தசையை எடுத்துக் கொள்வதிலும், தசாநாதனின் ராசியையே ஆரம்ப ராசியாக எடுத்துக் கொள்வதிலும் நமக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. நாம் நமது வழியைச் சொல்கின்றோம். இப்பொழுது ஒரு உதாரண ஜாதகத்தைப் பார்க்கலாம்.


இந்த ஜாதகத்தில் சுக்கிரன் துவாதசாம்சத்தில் கன்னியில் இருக்கின்றது. எனவே சுக்கிர தசையின் ஆரம்ப ராசி கன்னிதான். சுக்கிரனின் நைசர்க்கிக தசா வருடங்கள் இருபது. எனவே இருபது வருடங்களைப் பன்னிரண்டு பங்கு வைத்தால் பங்கு ஒன்றிற்கு இருபது மாதங்கள். சுக்கிர தசை 13 வயதில் ஆரம்பிக்கும் என்பதால், இந்த ஜாதகியின் 13 வயது பிறக்கும் நாளான 28.10.1961 அன்று சுக்கிரதசை ஆரம்பிக்கும். ராசி ஒன்றிற்கு இருபது மாதங்களாகக் கணக்கிட்டால் கீழ்க்கண்டவாறு சுக்கிரதசை பன்னிரண்டு ராசிகளோடும் சம்பந்தப்படும்.

மேலேயுள்ள ராசிச் சக்கரத்தில் ஒவ்வொரு ராசியிலும், ஒரு தேதி கொடுக்கப்பட்டுள்ளது. கன்னிராசியில் 28.10.61 என்று குறிக்கப்பட்டுள்ளது. சுக்கிரதசை கன்னிராசியில் 28.10.61ல் ஆரம்பிக்கின்றது என்பது அதன் பொருள். 28.06.63ல் துலாம் ராசியோடு சம்பந்தப்பட்ட சுக்கிரதசை ஆரம்பிக்கின்றது என்று அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இருபது மாதங்கள் ஒரு ராசியோடு சுக்கிரன் சம்பந்தப்படுவதால், இருபது மாதங்களைப் பன்னிரண்டு பங்கு வைத்துப் பங்கு ஒன்றுக்கு 50 நாட்கள் என்று எடுத்துக் கொண்டு, 28.10.61 முதல் 50 நாட்கள் முடிய கன்னி ராசி தசா, கன்னி புக்தி என்றும், அடுத்த 50 நாட்களுக்குக் கன்னிராசி தசா,துலா புக்தி என்றும் கணக்கிட்டுக் கொள்ளலாம். இப்படிச் செய்ய வேண்டுமென்று பலதீபீகையில் சொல்லப்படவில்லை. இது நமது கற்பனை. இவ்வாறு செய்து பார்ப்பதால் சோதிட சாத்திரத்துக்கு எந்தப் பங்கமும் வந்துவிடப் போவதில்லை.
இந்த ஜாதகிக்கு 27.11.1967ல் திருமணம் நடந்தது. 28.10.66 முதல் 27.06.68 முடிய தனுசு ராசியின் கால கட்டம். 28.10.66 முதல் 27.11.67 வரை கணக்கிட்டால் 1 வருடமும் 28 நாளும் வரும். அதாவது 389 நாட்கள் இதை 50ஆல் வகுத்தால் ஏழு பங்கு முடிந்து எட்டாவது பங்கு கிடைக்கும். அதாவது தனுசு ராசி சுக்ர தசையில் கடக புக்தி நடக்கும். அது ஏன் திருமணத்தைக் கொண்டு வந்தது என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.
This Week’s Quote:
Education is not preparation for life; education is life itself.
- John Dewey
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
