31.07.2016-ல் நாம் இதே தலைப்பில் (Abandoned Babies) ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். சனி, செவ்வாய் இவர்கள் ஒரே ராசியிலிருந்து, அந்த ராசி லக்னத்துக்கு 5, 9 இவ்விடங்களாகவும் இருந்து, சந்திரனும் ஏழில் இருக்குமானால் அந்தக்குழந்தை தாயினால் கைவிடப்பட்டதாக இருக்கும் என்று முந்தைய சோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளதாக எழுதியிருந்தோம். சமீபத்தில் எமது தந்தையாரின் ஜாதகத் தொகுப்பிலிருந்து ஒரு ஜாதகம் கிடைத்தது. “தாய் குழந்தையைப் போட்டுவிட்டு ஓடியதற்கு ஆதாரம் காண்க” என்ற குறிப்புடன் கீழ்க்கண்ட ஜாதகம் உள்ளது.




இந்தக் குழந்தையின் ஜாதகத்தில் செவ்வாய் கடகராசியில் 29 பாகை 52 கலையிலும், சனி சிம்மராசியில் 1 பாகை 17 கலையிலும் இருப்பதால் இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் 1 பாகை 25 கலைதான். எனவே செவ்வாய், சனி மிகச் சமீபச் சேர்க்கையுள்ள ஜாதகமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்திய பாவ முறைப்படி சந்திரனுக்குத் திரிகோணத்திலும், மேலைநாட்டுப் பாவ முறைப்படி லக்னத்துக்குக் திரிகோணத்திலும் செவ்வாய், சனி சேர்க்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் சந்திரன் ஏழாமிடத்திலும் இல்லை, அல்லது சில ஆசிரியர்களின் கருத்துப்படி அஸ்தமனமாகவும் இல்லை. ஆனால் இந்தக் குழந்தை பிறந்த பின்னர் இக்குழந்தையின் தாயார் குழந்தையையும், கணவரையும் பிரிந்து வேறொருவருடன் வாழச் சென்றுவிட்டார்.
லக்னாதிபதி நான்கில் இருந்தாலும், கூடவே அட்டமாதிபதி சுக்கிரனும் இருப்பதால் , லக்னாதிபதி நான்காம் பாவத்தில் இருக்கும் பலன் வீர்யம் இழந்து விடுகிறது. நான்காம் பாவாதிபதி புதனுக்கு, நான்காம் பாவத்துக்கு அட்டமாதிபதியான சனியின் முழுமையான பத்தாம் பார்வை கிடைக்கின்றது. இந்த இரண்டு காரணங்களும் அன்றைய தேதியில் பிறந்த அனைத்து மீன லக்ன ஜாதகத்துக்கும் பொருந்தும். எனவே இவைகளைத் தவிர வேறு காரணங்களையும் நாம் கண்டு பிடித்தால்தான் சோதிட சாத்திரத்துக்கு ஒரு அர்த்தமுண்டு.
நவாம்சச் சக்கரத்தில் நான்காம் பாவாதிபதி புதனின் நவாம்சபதி சனி ஜன்மலக்னத்துக்கு இரண்டிலும், நவாம்ச லக்னத்துக்கு எட்டிலும் மேசராசியில் உள்ளது. நான்காம் பாவத்தின் நவாம்சபதி குரு நவாம்சத்தில் ஜன்ம லக்னத்துக்குப் பன்னிரண்டிலும், நவாம்ச லக்னத்துக்கு ஆறிலும் உள்ளது. தாயாரின் பிரிவு தந்தைக்கும் இழப்புதானே! சூரியனுக்கு ஏழாம் பாவாதிபதி செவ்வாய்க்கும் சூரியனின் பத்தாம் பாவாதிபதி சனிக்கும் சேர்க்கையுள்ளது. (ஏழாம் பாவாதிபதி பத்தாம் பாவாதிபதி இருவருமே பாவிகளாயிருந்து அவர்களுக்குச் சேர்க்கையோ அல்லது எதிர்ப்பார்வையோ இருக்குமானால் ஜாதகரின் மணவாழ்க்கையில் சிக்கல் ஏற்படுவதை நாம் கவனித்துள்ளோம்.) மாத்ரு ஸஹம் என்ற புள்ளி (சுக்கிரன் - சந்திரன் + லக்னம்) இந்த ஜாதகத்தில் மிதுனத்தில் 25 பாகை 19 கலையில் உள்ளது. அட்டமாதிபதி சுக்கிரன் இப்புள்ளிக்குச் சமீபத்தில் உள்ளது. ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவெனில் பித்ரு ஸஹம் என்ற புள்ளி (சூரியன் - சனி + லக்னம்) தனுசு ராசியில் 24 பாகை 33 கலையில் உள்ளது. இரு புள்ளிகளும் ஒன்றுக்கொன்று ஏழில் அமர்ந்திருப்பது சோதிட சாத்திரத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.
This Week’s Quote:
Originality is the one thing which unoriginal minds cannot feel the use of.
- John Stuart Mill
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
